xmlns:fb="http://ogp.me/ns/fb#"> Ennangalsudha எண்ணங்கள் சுதா

Friday, September 21, 2012

எனது தமிழ் புனைகதை 617 வெளியீடு


  எனது முதல் தமிழ் புனைகதை 6174 செபடம்பர் 3 2012 ன்று வெளியாயிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள், திரு. பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் திரு. இரா.முருகன் அவர்களின் வாழ்த்துக்களுடனும் நல்லாசிகளுடனும் கதை வெளி  வந்திருக்கிறது .உங்கள் ஆதரவை நாடுகிறேன். கதை குறித்தான உங்களது கருத்துக்களைத் தயங்காமல் இப்பக்கத்தில் தெரிவியுங்கள்.



புத்தகம், ஆன் லைனில்  கீழ்க்கண்ட வலைத் தளங்களிலும் கடையிலும் 


பெற்றுக்கொள்ளலாம்
 .

http://discoverybookpalace.com/products.php?product=6174

1. Discovery book palace, No. 6, Munusamy road, First floor, Mahaveer Complex,West k.k. nagar, 
Chennai - 78
Contact person : Mr. Vediyappan
Contact number : 9940446650
2.   http://udumalai.com/?prd=6174&page=products&id=11731

3.The New Booklands,52, C North Usman Road, T. Nagar, 
Chennai - 600 017
Contact person : Srinivasan
Contact number : 9840227776

செ குவாரா (Che Guevara) எழுதி முடித்ததும் இதனைக் குறித்து அறிவிக்கலாம் என இருந்தேன். அது முடியப் பல மாதங்களாகும் என்ற நிலையில் 6174-ன் வெளியீடு இத்தருணத்தில் வர வேண்டியதாயிற்று. 
நண்பர்களின் ஆதரவையும், படித்தபின் மேலான கருத்துக்களையும் நாடுகிறேன்.

Saturday, January 07, 2012

கணனிப்புரட்சியும் கொடையும்

மும்பையின் இந்த வருட ஜனவரி தட்ப வெப்பநிலை, உலகப் பருவகாலத்தின் கோட்டிக்காரத்தனத்தின் வெளிப்பாடு. இரவுகள் நடுங்க வைக்க, பகல்பொழுதுகள் வியர்க்க வைக்கின்றன. மக்கள் நெரிசல் குறைந்த லோக்கல் வண்டியில் பயணம் செய்வது அபூர்வமென்றால், அதிலும் வெயில் மெல்ல ஏற ஆரம்பித்த பகல்களில் ஜன்னலருகே , மெல்ல வருடிய காற்றை அனுபவித்தவாறே பயணிப்பது அபூர்வ அனுபவம்.
அப்படித்தான் நேற்று லோவர் பரேல் ஸ்டேஷனிலிருந்து அந்தேரி நோக்கி நடுப்பகலில் பயணித்திருந்தேன். பாந்த்ரா நெருங்கும்போது, மிட்-டே பேப்பரில் வந்திருந்த விளம்பரம் ஈர்த்தது. பாந்த்ரா குர்லா வளாகத்தின் கண்காட்சித்திடலில் ”அன்றுமட்டும் அனுமதி இலவசம்” என அலறிய விளம்பரத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஐம்பது சதவீதம் தள்ளுபடி, இன்றே கடைசி” என்பதில் “அனுமதி இலவசம்” மட்டும் கவர்ந்தது. வழக்கம்போல , ஆப்பிள் மாக் கணனிகள் ஒரு லட்சத்தில் இருக்க, ஏஸர், ஆஸூஸ் நெட் புக், பலகைகள் இருவதாயிரத்தில் இருக்கும் எனத் தெரிந்தே இருந்தும், மாக்-கில் சற்றே கைவைத்துப் பார்க்க ஒரு அல்ப ஆசை. என் மகன் சொல்வதுபோல் “ என்றேனும் ஒரு நாள், நம்ம வீட்டிலும் மாக் இருக்கும்பா..ஆனா எந்த நாள்?” என்ற கேள்வியுடன் பாந்திராவில் இறங்கினேன்.
நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது. ஐ பேட்-இல் கை வைக்க ஐம்பது பேர் வரிசையில் நின்றிருந்தனர். ஒருத்தரும் வாங்கற மூஞ்சியாகத் தெரியவில்லை. நான் உள்பட. பாலிவுட் நடிகைகளைப்போல ஆப்பிள் பொருட்கள். எல்லாரும் வாயைப் பிளப்பார்கள். தொட்டுப்பார்க்க ஜொள்ளு விடுவார்கள். ’சரி நேரமாயிருச்சு’ என அடுத்த ரயில் ஏறிப் போய்க்கொண்டேயிருப்பார்கள்.
”எக்ஸ்யூஸ் மி” அழைத்த ப்ளூ ஜீன்ஸ் சேஸ்ல் பெண்ணிற்கு இருவது வயதிருக்கும். காலேஜ் கடைசி வருஷம் போலிருந்தாள். கல்லூரி மாணவ் மாணவியர்கள் இந்தமாதிரி கண்காட்சிகளில் , ஸ்டாலில் நிற்பதற்கும், ஆட்களை அழைப்பதற்கும், ஒரு நாளுக்கு 500-1000 ரூபாய் என பணி செய்வது மும்பையில் சகஜம். 
எக்ஸாம் வந்துருமே இப்போ? என்ற எனது அனாவசியக் கவலைகளை அவள் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள்.” கம்ப்யூட்டர் பாக்கிறீங்களா? ரொம்ப வித்தியாசமான..”
“வேணாம்மா.தாங்க்ஸ்.” கம்ப்யூட்டர் ஒரு கம்ப்யூட்டர்.. அதுல என்ன வித்தியாசமா இருக்கப்போகுது? நான் பாக்கததா?
“இல்ல சார். ரீசைக்கிள் பண்ணின பொருட்கள்ல இருந்து தயாரிச்சது. விலை 4900 ரூபாய் மட்டுந்தான்”
சுவாரசியமானேன். ரீசைக்கிள்ட்... நிறைய கம்ப்யூட்டர்கள் ப்ளாக் மார்க்கெட்டில் அடிமட்ட விலையில் வருவதெல்லாம் இந்த மாதிரித்தான் என்றாலும், வெளிப்படையாச் சொல்ல ஒரு துணிச்சல் வேணும்.
ஸ்டாலில் பெரிய போர்டு. உடைஞ்சுபோன கம்ப்யூட்டர்களை குவிச்சுப் போட்ட இடங்களிலிருந்து, ராம், ஹார்ட் டிஸ்க், மதர்போர்ட் என எடுத்து, பிரித்து, புதிய சி.பி.யூ அசெம்பிள் பண்ணி அசத்தியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு 1995ல செஞ்ஜ  386/486 கம்ப்யூட்டர் போல இருந்தது. பெரிய மவுஸ்..ஜிகு ஜிகுவென சிகப்பாக எல்.இ.டி ஒளிர்ந்தபடி, ட்ராஃபிக் லைட் மாதிரி பிரகாசமாக.. எருமை மாடு சைஸ்ல சி.ஆர்.டி மானிட்டர். இன்னும் இருக்கா இதெல்லாம்?

எவன் வாங்குவான்?
“ ஸ்கூல், காலேஜ்ல நன்கொடையா நிறையப்பேர் கொடுக்கறாங்க சார். கிராமத்துல முனிசிபல் ஆஸ்பத்திரி. மகளிர் சுய வேலைக்குழு, லைப்ரரி..” 

ரொம்ப வருஷமாக் கேட்டுக்கொண்டிருக்கிற பாரிவள்ளல் ரேஞ்சுக்குக் கொடை குணம் . வீணாப்போன கம்ப்யூட்டரை வீட்டிலிருந்து தள்ளிவிடுவது பேரு நன்கொடையா? ரெண்டு நாள் புளித்த மோர்சாதத்தை  ”வேலைக்காரிக்குக் கொடுத்துட்டேன்” எனப் பெருமையடித்துக்கொண்ட அந்த காலத்துப் பெண்களின் பேச்சுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
“எவ்வளவு கரண்ட் எடுக்கும்?”
“சார்?” அவள், ஒல்லியாயிருந்த ஒரு மனிதரை அழைத்தாள். அவரைவிட ஒல்லியாக ஒரு சிகப்பு டை அணிந்திருந்தார்.  இன்னும் கொஞ்சம் ஒல்லியாயிருந்தால் அதன் பேர் பாவாடை நாடா.
“இந்த சி.ஆர்.டி மானிட்டர், சி.பி.யூ என்ன பவர் ரேட்டிங்க்? எழுவது வாட் இருக்குமா?”
 ஒல்லி  மேனேஜர் திணறினார்.
“ம்... தெரியல சார். இருக்கும்”
”கிராமத்துல கரண்ட் வர்றதே கொஞ்ச நேரம். அதுல இவ்வளவு கரண்ட் இழுத்துச்சுன்னா..”
“ரூரல் ஏரியால நல்லா போவுது சார்.   விவசாயத்துக்கு கரண்ட் இலவசம். ”
எவன் சொன்னான் இவர்களுக்கு?
கம்ப்யூட்டரின் செயல்திறன் ஆச்சரியப்படும் அளவு, நன்றாகவே இருந்தது. ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருள் , மராத்தி எழுத்துரு செயலி, லேன் கேபிள் வசதி- ப்ராட்பேண்ட் வசதிக்கு..போதுமே?
“வீட்டுல இருக்குங்க. வேணாம். தாங்க்ஸ்” நழுவினேன்.
ஒல்லி விடுவதாயில்லை.
“நன்கொடையாக் கொடுக்கலாம் சார். மூணு தவணைல பணம் கொடுத்தாப்போறும்.  உங்க பிறந்த நாள் சொல்லுங்க. உங்க பேர் பொறிச்சு , பன்வேல் பக்கம் ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பிறலாம்”
மனிதர் ஒரு லெட்டர் பேட் எடுத்துக்கொண்டார்.
“ உங்க பேரு?”
நட்சத்திரம், கோத்திரம் மட்டும்தான் கேக்கவில்லை. அர்ச்சனை சீட்டு மாதிரி ஒரு பேப்பரைக் கையில் திணித்தார்.
“600 ரூவா மட்டுந்தான் அட்வான்ஸ்”
தொந்தி தள்ளின ஒரு குஜராத்தி மனிதர் ஸ்டாலுக்குள் நுழைந்தார். ப்ளூ ஜீன்ஸ் அவரை நோக்கித் தாவ, மேனஜரின் கவனம் என்னை விட்டு ஒரு வினாடி அகன்றது.
அது போதும் எனக்கு. அடுத்த கடைக்கு மெல்ல நழுவினேன்.
“வாங்க சார். புது விதமா மாங்கா ஊறுகாய்”

Thursday, February 17, 2005

Sunnacch chuvadukaL

சுண்ணாம்புச் சுவடுகள்.
--------------------

கழிந்த கோடையில்
அடித்த சுண்ணம்
பாசியினின்றும் சுவர்களைக்
காத்திருக்கவேண்டும்தான்
- அடுத்த கோடைவரையிலாவது.


நீர் ஊற்றி
வெம்மையேற்றும்
நூதன இயற்பியல் விதிகளோடு,
சுண்ணக்குவியல் கொதித்தது
குமிழிகளுடன்...

கருகருவென்றிருந்த
குதிரை மயிர்கட்டிய
தூரிகைகள் வெண்மையூறி
இற்றும் போயின,
பின் கட்டுச் சுவர் வண்ணம்
பூசி முடித்த போது.

தரையில் சுண்ணச் சூரியன்கள்
சிந்திக்கிடக்க,
வீட்டினுள் உஷ்ணம் கூடி
கண்கள் எரிய,
எங்கும் வெண்மை...
சுண்ணத்தின் நெடி
சோற்றிலும், நீரிலும்

அனைத்தையும் பொறுத்தது
சுவர்களைக் காக்க மட்டுமே.

எனக்கென்னவோ
அடர்மழையின் பின்
கற்களூடே படர்ந்து
சுவரேறும்
பாசப் படுகை
கவர்ந்திருக்கிறது
சுண்ணத்தைவிட..

பாசியும் மடியும்
மஞ்சளாய் உதிர்ந்து
இலையுதிர்காலத்தில்..
சுண்ணச் செதில்களோடு

நிர்வாணக் கற்கள்
வெறித்து நிற்கின்றன
கோடையில் அடுத்த
சுண்ணப்படுகை ஏறும்வரை


பாவம் சுவர் கற்கள்
வாழட்டும் அன்றுவரையெங்கிலும்.

அன்புடன்
ஸ்ரீமங்கை

Wednesday, February 16, 2005

Sunnacch chuvadukaL

சுண்ணாம்புச் சுவடுகள்.
--------------------

கழிந்த கோடையில்
அடித்த சுண்ணம்
பாசியினின்றும் சுவர்களைக்
காத்திருக்கவேண்டும்தான்
- அடுத்த கோடைவரையிலாவது.


நீர் ஊற்றி
வெம்மையேற்றும்
நூதன இயற்பியல் விதிகளோடு,
சுண்ணக்குவியல் கொதித்தது
குமிழிகளுடன்...

கருகருவென்றிருந்த
குதிரை மயிர்கட்டிய
தூரிகைகள் வெண்மையூறி
இற்றும் போயின,
பின் கட்டுச் சுவர் வண்ணம்
பூசி முடித்த போது.

தரையில் சுண்ணச் சூரியன்கள்
சிந்திக்கிடக்க,
வீட்டினுள் உஷ்ணம் கூடி
கண்கள் எரிய,
எங்கும் வெண்மை...
சுண்ணத்தின் நெடி
சோற்றிலும், நீரிலும்

அனைத்தையும் பொறுத்தது
சுவர்களைக் காக்க மட்டுமே.

எனக்கென்னவோ
அடர்மழையின் பின்
கற்களூடே படர்ந்து
சுவரேறும்
பாசப் படுகை
கவர்ந்திருக்கிறது
சுண்ணத்தைவிட..

பாசியும் மடியும்
மஞ்சளாய் உதிர்ந்து
இலையுதிர்காலத்தில்..
சுண்ணச் செதில்களோடு

நிர்வாணக் கற்கள்
வெறித்து நிற்கின்றன
கோடையில் அடுத்த
சுண்ணப்படுகை ஏறும்வரை


பாவம் சுவர் கற்கள்
வாழட்டும் அன்றுவரையெங்கிலும்.

அன்புடன்
ஸ்ரீமங்கை

Experiences- Naatupuram 2

நாட்டுப்புற அனுபவங்கள் -2

குஜராத்- மகாராஷ்ட்டிரா எல்லை
____________________________________

"இத்தோடு மூன்றாவது" எண்ணிக்கொண்டிருந்தேன். மூன்று வண்டிகள் எங்களைத் தாண்டிப் போய்விட்டன, நிற்காமலேயே. சாலஒயோரத்தில் ப்ளிங்க்கர்களை மினுக்கியபடி எங்கள் டாட்டா சுமோ நின்றுகொண்டிருக்க, ஓட்டுநர் , சக்கரத்தை மாற்றும்பணியில் மும்முரமாக இருந்தார். வியர்வை வெள்ளத்தில் அவர் முதுகெங்கும் நனைந்து, சட்டை கருத்திருக்க, சுவர்க்கோழிகளின் சப்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.
"இன்னும் எவ்வளவு நேரமாகும்ப்பா?" பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்வியல்ல எனினும், கேட்கும் வழக்கத்தை நான் மீறவில்லை
"கொஞ்ச நேரம்தான் சார்". பதிலும், கேள்விக்குச் சரியாகவே வந்தது."கொஞ்ச நேரம்" என்பதை யார் வரையறுப்பது?
குஜராத் மஹாராஷ்ட்ட்ரா எல்லையில் நாசிக் போகும் மலைப் பாதையில் மாட்டிக்கொண்டிருந்தோம். மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதியில், அத்துவானக் காட்டில் மாலை ஆறுமணிக்கு , சக்கரம் பழுதாகி நின்றிருக்க. என்னோடு , சைலேஷ் பட் என்ற நண்பனும் குளிரில் வெடவெடத்து நின்றிருந்தான். ஜனவரி குளிர் ஊசியாகக் குத்தத் தொடங்கியிருந்தது. மடமடவென இருட்டிக்கொண்டு வந்ததில், சாலை மங்கலாக, ஹெட்லைட் வெளிச்சத்தில் , முன்னே பத்தடி தூரமே தெரிந்தது. அடர்பனிப் புகையில் வண்டியின் கதவுகளில் ஈரப்பதம் மண்டியிருந்தது.
" சுதாகர்பாய். இங்கே ராத்திரி சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. வாங்க, சீக்கிரம் எதாவது கிராமம் தெரியுதான்னு பாத்துப் போயிடலாம்." சைலேஷ் மெதுவாகப் படபடத்தான். பயத்தைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை போலும்
" வண்டிக்குள்ளேயே இருப்பமே? எதுக்கு வீணா அலைஞ்சுகிட்டு?" என்றேன்.
" இப்பவே பனியைப் பாருங்க. பத்தடி முன்னால என்ன இருக்குன்னு தெரியலை. ராத்திரி, லாரி கண்ணு மண்ணு தெரியாம வருவான். அடிச்சுட்டுப் போனான்னா, நாம சட்னிதான்"
எனக்கு மெல்ல சூழ்நிலையின் தீவிரம் உரைத்தது. யோசிக்க நேரமில்லை.
"சுதாகர்பாய். இங்கேயிருந்து மூணு கிலோமீட்டர் தூரத்துல ஒரு கோயில் இருக்கு.ன்னு ஒரு போர்டு பார்த்தேன். அங்க போயிடலாம். யாராச்சும் பக்கத்துல இருப்பாங்க. டிரைவர், நீங்களும் வாங்க. கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டுட்டு.".சைலேஷ் எனது பதிலைக் கேட்காமலேயே, அவனது தோள்பையைத் தூக்கிக்கொண்டான்.
தோளில் லாப்டாப்பும், பயணப்பையுமாய் அவனைத் தொடர்ந்தேன்
ஒரு மணிநேர நடையின் பின், மினுக் மினுக் என ஒளிர்ந்த விளக்கைப் பார்த்தோம். மெல்ல அதை நோக்கி நடந்தோம்
" கோன் ஹை?"
மிக அடர்வான குரலில் அதிர்ந்தாலும், தைரியமாய் சைலேஷ் கேட்ட திசையை நோக்கிக் கத்தினான்.
" வெளியாள். வண்டி நின்றுவிட்டது. உதவி தேவை"
மரங்களின் சலசலப்பில் இரு மனிதர்கள் வெளிவந்தனர். மிக ஒல்லியான தேகம். சுருக்கங்களுடன் கூடிய தோல். வேட்டிபோல எதோவொன்று இடுப்பில். மேலே, கனமான விரிப்புப் பாய் போல ஒன்றைச் சுற்றியிருந்தனர்.
"மேலே போகாதீங்க. திரும்பிப் போங்க"
நின்றோம். "ஏன் போகக்கூடாது? அந்த கிராமத்துக்குப் போயிட்டு, விடிஞ்சதும் வண்டியைச் சரிபண்ணிக்கொண்டு போயிடறோம்". எனது குரல் எனக்கே அந்நியமாய்க் கேட்டது.
"திரும்பவும் சொல்லறேன். அங்கே போகாதீங்க"
"ஏன்?" டிரைவர் கோபமாய்க் கத்தினார். மேல்மூச்சு வாங்க , மலையில் ஏறியதில் மூச்சு இறைத்தது.
"அங்கே கொலை நடந்திருக்கு."
உறைந்தோம். என்ன இழவு இது? எங்கே வந்து மாட்டிக்கொண்டிருக்கிறோம். கீழே இறங்கிப் போவது சுலபமில்லை. ஒரே இருட்டு. வழி தெரியாது.
எங்கள் திண்டாட்டத்தைப் பார்த்து அவர்களுக்கே இரக்கம் வந்திருக்கவேண்டும்."எங்களோடு வாங்க"
வழியில்லாமல், பின் தொடர்ந்தோம். யார் இவர்கள்? இவர்கள் சொன்னதுக்காக நாம் ஏன் பின்னால போகவேண்டும்? ஒரு நினைவும் அப்போது வரவில்லை. குளிரும், களைப்பும் அப்படி.

மலையின் ஒரு சரிவில் இறங்கினர். சிறிய மண்டபம் போல இருந்த ஒரு கல்கட்டடத்தில் அவர்களூடன் நுழைந்தோம். வெளவால்களின் நாற்றம்..குமட்டியது.
" காலேல, இந்த வழியா இறங்கிப் போங்க. அரைமணிநேரத்தில நாசிக் பாதையில் இருக்கும் பெட்ட்ரோல் பம்ப் வரும். அதுக்குப் பக்கத்துல டயர் பங்க்சர் ஒட்டற இடம் இருக்கு. வாபி போற லாரிலே அவனைக் கூட்டிட்டுப் போய் வண்டியை எடுத்துக்க" சொன்னவர்கள் மண்டப ஓரமாய் குத்திட்டு அமர்ந்து சிகரெட் பிடிக்கத் தொடங்கினர். கனத்த மொளனம் சூழ்ந்தது. ஒருவர் கூடப் பேசவில்லை.

சைலேஷ் மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்தான்.
"நீங்க இங்கேயேதான் இருக்கீங்களா?"
பதில் இல்லை.
என்னைப் பார்த்து சைலேஷ் தர்மசங்கடமாய் சிரித்தான். நான் மொளனித்தேன். ஐந்து நிமிடங்கள் அமைதியாகச் சென்றன.

ஒருவன் மெல்லத் திரும்பினான். "எங்கே போய்க்கொண்டிருந்தீர்கள்?"
"நாசிக்.. அப்படியே பக்கத்தில் சில உற்பத்திசாலைகளுக்கும் செல்லவேண்டியிருந்தது" சைலேஷ் வாய்ப்பை நழுவவிடவில்லை.
அவன் அமைதியானான்.
திடீரென மற்றவன் எழுந்தான்." நீ எந்த ஊர்க்காரன்?" என்னைக் கேட்டவிதத்தில் வியர்த்தேன்.
"ம...மதராஸி நான்" சொல்லி முடிக்குமுன்னே அவன் என் முன் குனிந்தான்.
"பிழைத்தாய். உன் உடல் நிறத்தைப் பார்த்ததும் நீ இந்த ஊர்க்காரனோ என எண்ணிவீட்டேன்"
சொன்னவன் மெல்லப் பின் நகர்ந்தான். மற்றவன் அவன் தோள் மீது கைவைத்துத் தள்ளினான்.
"விடு. எவன் போகவேண்டுமோ அவன் போய்விட்டான். இனியென்ன?"
என் உடல் ஆடியது. உதடுகள் வறண்டு உலர்ந்தன. சைலேஷ் என் பின்னால் ஒளிந்த்கொண்டான்.

மெதுவாய் ஒருவன் சொல்லத் தொடங்க, மற்றவன் மல்லாந்து படுத்தான்.
" நாங்கள் மலைசாதிக்காரர்கள். இந்த இடம் எங்களுக்குச் சொந்தம். சில #### ஜாதி நாய்கள், பைசா வாங்கிக்கொண்டு பட்டா எழுதிக்கொடுத்து.. இன்று ஒன்றூமில்லாமல் இருக்கிறோம். "
சைலேஷ் எதையோ சொல்லத்தொடங்க, நான் அவன் கையை அழுத்தினேன்.
"ஒரு வாரம் முன்னால் இதோ கிடக்கிறானே, அவனது தங்கையை, ரோடு போடும் பணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சூப்பர்வைசர் சீரழித்துவிட்டான். ஒரு தடயமும் இல்லாமல் அவ்ளை மிரட்டி ஓரிடத்தில் அடைத்து வைத்து, பலரும்....."
நாங்கள் உறைந்திருந்தோம்
"போலீஸ் அவனுக்குத் துணை. ஒரு ஆதாரமும் இல்லாமல் நாங்கள் அலைந்தோம். ஆதாரம் கிடைத்தது போனவாரம்.. அந்தக் காட்டுக் கோவிலில். "
"மெதுவாக அவனைப் பின் தொடர்ந்தோம். இன்று அவளைப் பார்க்க அவன் வந்தபோது , பழி தீர்த்தோம்."
"அதுதான் அங்கே போகவேண்டாம் எனச் சொன்னேன். புரிந்ததா?"
எங்களைப்பார்க்காமலேயே சொன்னவனும் நீட்டி நிமிர்ந்தான்.
மெதுவாக அவன் பாடத்தொடங்கினான்.
" ஊருக்குக் காவல்
அந்தக் கோயில்.
கோயிலுக்குக் காவல்
உறூமும் வேங்கைகள்.

யாருக்காய் இக்காவல்
நரிகள் கோயிலை
இறைச்சி சேமிக்கும்
கிடங்காக்குகையில்?

மரங்களில் பழங்கள்
பத்திரமாய் இல்லாதிருக்க
மந்திகளுக்காய் இக்காவல்.

திருட்டின்றி, காவலின்றி
மலையின் நீதி
என்று வரும் எங்களூக்கு
பருவ மழைபோலப்பொழிந்து?



உறக்கம் வரவில்லையெனினும், களைப்பு, கால் வலி என அயர்வு எங்களைத் தூக்கியது. செவ்வான உதயத்தில் இருவரையும் காணவில்லை. மெல்ல நாசிக் சாலையில் இறங்கினோம். ஓட்டுநர் , பங்ச்சர் ஒட்டும் ஆளிடம் பேரம் பேசிக்கொண்டிருக்க, புகை கக்கி வந்த ஒரு லாரியில் நானும் சைலேஷும் ஏறிக்கொண்டபின், மலை மேல் ஒரு முறை நோக்கினேன். பெரும் தேவதாரு மரங்களினூடே , சில குரங்குகள் தாவுவது , நிழலாகத் தெரிந்தது.

(அன்று சுத்தமாய் எனக்குப் புரியவில்லை. சைலேஷ் மற்றும் ஓட்டுநர் புரிந்ததாய்ச் சொன்னதைவைத்து இதனை வடிவமைத்திருக்கிறேன்.)


க.சுதாகர்

Monday, February 14, 2005

Goa travelogue NaatupuRa ThinavukaL

அன்பு நண்பர்களே,
எனது பயணங்கள் பல மாநிலங்களின் கிராமங்களிலும், அம்மக்களின் கலாச்சாரத்திலும் அழுந்தி அந்நிறம் கொண்டவை. அவற்றின் சில நிறங்களின் மூலங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

நாட்டுப்புறத் தினவுகள்
----------------------------


வாஸ்கோ பஸ் நிலையத்தை நெருங்குமுன்பே மழை சிறிதே வெறித்திருந்தது. ஆட்டோ விலிருந்து இறங்கி பயணச்சீட்டு வாங்க நிற்கும்போது , முன்னே இருந்தவர் தலையைச் சிலுப்ப , கண்ணில் நீர் தெறித்தது.
"மன்னிக்கவும். தெரியாமல் .." திரும்பிப் பார்த்தவரின் கண்களில் நிஜமாகவே மன்னிப்புக் கேட்கும் பாங்கு தெரிந்தது.
"பரவாயில்லை" என்றவன் புன்னகைத்தேன். என்னைக்கேட்காமலே எனக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுத்தவர், என்ன சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
அது வாஸ்கோவிலிருந்து கிளம்பினால் பன்ஜிம் வரை நிற்காமல் போகும் கடம்பா ட்Tரான்ஸ்போர்ட்-டின் வேகப் பேருந்து. மினி பஸ் போல இருக்கும் அந்த வண்டியில் , பயணச்சீட்டு வாங்கி ஏறிக்கொண்டபின், கதவு அடைக்கபடும். பன்ஜியில் போய்த்தான் நிற்கும். ஒரு மணிநேரப் பயணம் போவதே தெரியாது. அருகருகே அமர்ந்தோம்
"நான் சிரீஷ் காமத்" என அறிமுகப்படுத்திக்கொண்டார்.
"வாஸ்கோவில் கடை வைத்திருக்கிறேன். இரும்புக் கம்பிகள் ஏஜென்ஸி. பான்ஜியில் பெண் இருக்கிறாள். இன்று போய் அவள் வீட்டில் இருந்துவிட்டு நாளை வீடு திரும்புவேன். முளுகாமல் இருக்கிறாள்..." இரு நிமிடங்களில் வெகு சகஜமாகப் பேசவாரம்பித்துவிட்டார். முன்வழுக்கையில் பளபளத்த தலையும், எடுப்பான நாசியுமாய் ,சிரீஷ் , என்றோ பரோடாவில் பார்த்த ப்ரவீன் ஜெயின் என்ற நண்பரை நினைவுபடுத்தினார். சிலரைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. மனது, நாம் அறியாமலே, நமக்கு அறிமுகமானவரோடு தொடர்பு படுத்திப்பார்க்கிறது. சிரீஷ் அந்த ரகம்.
மழை மீண்டும் தொடங்கியது. சாலையோரம் புதுப்பசுமை மழையில் கனத்து, தலைவணங்கி நின்றன. சாலை, புது மழை வெள்ளத்தில் லேசாகப் பளபளத்தது திட்டுத் திட்டாக.
"சன்னல் கண்ணாடியை மூடிவிடுங்கள்" என்றேன். அவர் மூடியபின்னும், ஓட்டுனர் அருகேயிருந்த சன்னலிலிருந்து அடித்த சாரலில், தொடையில் பேண்ட்டை நனைத்தது.
"இந்த வருசம் நல்ல மழை. போனவருடம் நீங்கள் பார்த்திருக்கவேண்டும். மிகக் குறைவு. ஜுவாரி நதி பெருகவேயில்லை. மங்கேஷ் நாதர் அருளில் இன்னும் பெய்யட்டும்" காமத் பேசிக்கொண்டேயிருந்தார்.
பேருந்து வேகம் குறைந்து சாலையோரம் நின்றது. ஓட்டுனர் குதித்து இறங்கினார்.
"ப்ரேக் சரியாக வேலைசெய்யவில்லை. வண்டி மேலே போகாது. அடுத்தடுத்து வரும் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றவரை சரமரியாக வண்டியிலிருந்தவர்கள் திட்டிக்கொண்டே இறங்கினர்.
பலரும் குடைகளை விரிக்க, நிற்க இடம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதிக தூரம் செல்லவும் மனமில்லை. பேருந்து முன்னேயே நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டுவிட்டால்? நெரிசலில் குடைகள் இடித்துக்கொள்ள, நான் , காமத்தின் குடைக்குள் நின்றேன்.

முதலில் வந்த பேருந்தில் அடித்துக்கொண்டு பலரும் ஏற முயற்சிக்க, சிரீஷ் என்னைத் தடுத்தார்." அடுத்த வண்டியில் போகலாம். நெரிசல் அதிகம் இதில்". கோவாவில், மக்கள் மெதுவாகவே எதையும் செய்யும் பழக்கம்.. மும்பையில் அடித்துக்கொண்டு ஓடும் என்னால் இதைப் பெரும்பாலும் சீரணிக்க முடிவதில்லை. சிரீஷ் சொன்னதுக்காக நின்றேன்.

அடுத்த வண்டி, சிரீஷ் சொன்னபடியே காலியாக வந்தது. ஏறி அமர்ந்ததும், என்னைப்பார்த்து சிரித்தார் " சொன்னேன் பார்த்தியா" என்படு போல. மழை நிற்பதாகத் தெரியவில்லை.
"இங்கே கொங்கணி , மராட்டி தவிர சில கிராமங்களில் பேசும் மொழி வித்யாசமாக இருக்கும். அவை வட்டார மொழிச்சொற்கள் என்றாலும், புரிந்துகொள்வது சற்று சிரமம்" என்ற சிரீஷ் காமத், நான் இலக்கியம் குறித்து கேட்டதும், உற்சாகமானார்.
"நான் ஦ங்களியில் கவிதைகள் எழுதுவேன். கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு: என்றவர், மேலும் தொடர்ந்தார்.
போர்த்துகீசியர்கள் வருமுன் இருந்த மொழி பெரிதும் மாறிவிட்டது. Inquistion போது , பல அடக்குமுறைகளுக்கு உட்பட்ட மக்களோடு, மொழியும் மாறிவிட்டது" என்றார் பெருமூச்சுடன்.

நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை என்ன என நான் கேட்டுக்கொண்டிருந்த போது, கோவா மருத்துவக் கல்லூரியருகே பேருந்து நின்றது.
ஏறிய மூவரில் இருவர் கணவன் மனைவி போல இருந்தனர். பின் ஏறிய வயதான பெண், அவர்களுக்கு முந்திய இருக்கையில் அமர்ந்தாள். மூவரின் முகத்திலும் சோகம் அப்பிக்கிடந்தது. கலைந்த ஆடைகளும், அழுக்கான தோற்றமும், அவர்களது பொருளாதார நிலையைச் சொல்லாமல் சொல்லியது.

பேருந்து கிளம்பியதும் , தொடங்கியது அவ்வழுகையொலி. பலரும் திரும்பி நோக்கினர். அம்மூதாட்டி, உரக்க அழுதுகொண்டிருந்தாள்.
சிலர் எரிச்சலில் உச் கொட்டினர். நடத்துனர் அவளருகே சென்றவர் , என்ன சொல்வதெனத் தெரியாமல், தயங்கி முன் சென்றார்.


சிரீஷ் காமத் " அவள் புலம்புவது மிகவும் அரிதான வட்டார வழக்கு மொழி. பலருக்கும் இங்கே புரியாது." என்றவர், அவளது புலம்பல்களை உன்னித்துக் கவனிக்கத் தொடங்கினார். சிறிது எட்டிக் குனிந்து, முன் சீட்டில் அமர்ந்திருந்த அம்மனிதனிடம் என்னமோ கேட்டார்.

"ச்.சே. பாவம்" என்றவாறே அமர்ந்து , என்னைத் திரும்பிப் பார்த்தார்.
" அவளது மகன் குறித்தான சோகம். மருத்துவமனையில் இறந்திருக்கிறான். சடலத்தை எடுத்து வர பணமில்லை. கிராமத்திற்குச் சென்று, உறவினருடன் வருவதற்காக , தன் மூத்த மகனோடும், அவன் மனைவியோடும் போகிறாள்." என்ற விவரம் சொன்னார்.

அப்பெண்ணின் அழுகை கூடிக்கொண்டே போனது. கூடவே என்னமோ சொல்கிறாள். யாருக்கும் புரிபடாமல்,...
திரும்பித் திரும்பிப் பார்த்தவர்களில், ஒருவர் எழுந்து வந்தார். அப்பெண்ணிடம் ஏதோ சொல்லக் குனிந்தவர், மெதுவாகத் தன் இருக்கைக்குத் திரும்பினார்- ஒன்றும் சொல்லாமலே.
சிரீஷின் கண்களில் ஈரம் கசிந்தது
"என்ன சொல்கிறாள்?" எனக் கேட்டேன்..சோகம் எல்லாருக்கும் ஒன்றுதானே. மரணம் , இறந்தவனை விட இருப்பவர்களையே அதிகம் தாக்குகிறது.
" அவளது பிலாக்கணத்தின் ஆழம் என்னை அசைக்கிறது. என்னால் முழுதுமாக மொழிபெயர்க்க முடியாது. இருப்பினும் முயற்சிக்கிறேன் " என்றார் சிரீஷ் ஆங்கிலத்தில்.

" இந்த மாரிக்காலத்திற்கா
இத்தனை கோடைகளைத் தாண்டி வந்தேன்?
இந்தக் கண்ணீர்த் தாரைகளுக்காகவா
ஜூவாரியில் நீராடி கண்களில் நீர்சேர்த்திருந்தேன்?
நமது தென்னைகளுக்காக நீ வெட்டிய
கால்வாய்களில்,
குருதி மழை பெய்வதாக
நேற்றிரவு கனாக்கண்டேன்.
இக் கனாவின் மூலம்
என் கண்களெனில்
அவை உன் உடலோடு
எரிந்து போகட்டும்
கனவின் மூலம்
என் உயிரேயெனில்,
உன்சிதையில் அதுவும்
கருகட்டும்.
மகனே!
ஊருக்கு உன் மரணம் சொல்லிவிடுவேன்
என் மனதுக்கும் உன் மரணம் சொல்லிவிடுவேன்
வீட்டின் தெற்குமூலையில்
நீ போன வருடம் நட்ட
தென்னையின் புதிய ஓலைக்குருத்து
நான் வீடு போனதும்,
நீ எங்கேயென காற்றிலாடிக்
கேட்குமே?
அதற்கென்ன சொல்லுவேன்?"

சிரீஷ் ஒருநிமிடம் மெளனித்தார். அவர் குரல் கம்மியது.
அப்பெண்ணோடு, அவள் மகனும் ,மருமகளும் இறங்கிச் செல்வதை மங்கலான பேருந்தின் உட்புற குழல்விளக்கின் ஒளியில் பார்த்தபடி உறைந்திருந்தேன்.
மழை மீண்டும் பலமாகத் தொடங்கியிருந்தது.


அன்புடன்
ஸ்ரீமங்கை

Saturday, February 12, 2005

Advantages of having one leg

Advantages of having one leg என G.K.Chesterton எழுதியதைப் படித்த ஞாபகம் இன்று வருகிறது. காலை நானும் உடைத்துக்கொண்டு பூரண படுக்கை ஓய்வில் பதினைந்து நாட்களுக்கு இன்று முதல் கிடக்கிறபடியால்.

அதிகாலை 4 மணிக்கு ரயிலிலிருந்து இறங்குபவர்கள் என்னைப்போல் தூங்கக்கூடாது. இல்லாவிட்டால் போரிவல்லி ஸ்டேஷன் வந்துவிட்டது என எவரோ கத்தியது கேட்டு நான் அடித்துப் பிடித்துக்கொண்டு இறங்க, பின்னால் இருந்த 100 கிலோ மனிதம் , என்னைத்தள்ள இப்படி இடது கால் வளையுமாறு விழுந்திருப்பேனா?
கணுக்கால் ஜிவ்வென வீங்க, எவரோ செய்த புண்ணியத்தில் இரு போர்ட்டர்கள் தூக்கிவந்து ஆட்டோ வில் ஏற்றி அனுப்பியது வரைதான் ஞாபகம் இருக்கிறது. வீட்டில் இறங்கியதும், பின்னர் மருத்துவமனையில் எக்ஸ் ரே எடுத்ததும், காலில் ப்ளாஸ்டர் கட்டுப் போட்டு," பதினைந்து நாட்களுக்கு அசையக்கூடாது" என்று அந்த டாக்டர் சொன்னதும் ஏதோ கிறக்கத்தில்தான் இன்னும் இருக்கிறது

திருத்தக்கன், போன் போட்டு " அதிசயமாகக் கிடைத்த லீவு. ஜமாயுங்கள்" என்றுசொன்னதும் chesterton தான் நினைவுக்கு வருகிறார்.

இத்தனை நாள் இந்த மின்விசிரியின் சப்தம் இப்படிக் கேட்டதில்லை. எலக்ட்ரீஷியனைக் கூப்பிடவேண்டும்
புலி நகக் கொன்றை -இன்னும் ஒரு தடவை படிக்கலாம். அப்படியே அந்த strong medicine இன்னொரு முறை புரட்டலாம்.
zen and art of motorcycle maintenance புத்தகம் எங்கோயோ காணாமல் போயிருக்கிறது. தேட எழுந்திருக்க முடியாது. இது எனது எரிச்சல். தேடச் சொல்கிறானே என என் மகனின் எரிச்சல்.
கவிதை என எதையாவது எழுதலாம்
இத்தனை நாள் தொடர்பற்றுப் போயிருந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து தொலைபேசியில் அரட்டையடிக்கலாம்.
பையனின் கணிதப் புத்தகத்தை இன்று தான் பார்க்கிறேன். மூன்றாம் வகுப்பில் நானெல்லாம் அன்று வாய்ப்பாடு மட்டும் சொல்லிக்கொண்டிருந்ததாக ஞாபகம். இவன் என்னடாவென்றால் தனிவட்டி, கூட்டுவட்டி என்கிறான்.
மதியம் வந்து கரையும் இந்தக் காக்கையை இதன் முன் கண்டதில்லை -(இத்தனை தைரியமாய் எனது சன்னலில் அமர்ந்து..)
தொலைக்காட்சியில் அப்படி என்னதான் சீரியல் காட்டுகிறார்கள் எனப் பார்த்தேன். சத்தியமாய் எனக்குப் புரிந்தவரை இப்படி ஆ-வென வாய் பிளந்து பார்க்க ஒன்றுமில்லை எனத்தான் படுகிறது.

அடிக்கடி வந்து இனிமே தொல்லை பண்ண சாத்தியக்கூறு இருப்பதால், நண்பர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
அன்புடன்
க.சுதாகர்.

Rail AthirvukaL

இரயில் அதிர்வுகள்
--------------------------

போய்க்கொண்டேயிருக்கிறது
இத்தொடர் வண்டி
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்

பழுப்பு நிற அழுக்கு
இணைவுப்பெட்டிகளினூடே
புதிதாய் நீலநிறப்பெட்டி
எப்போதும் அதே வரிசையில்
இல்லாது நகரும்.
மெல்லியதாய் முனகியபடி


முட மறுக்கும் , திறந்த கண்ணாடி சன்னல்
திறக்க மறுக்கும் மூடிய இரும்பு சன்னல்
பகுதி திறந்திருக்கும் சன்னல்களோவெனில்
இன்னும் அபத்தம்.

காற்று சமனப்படுத்திய பெட்டிகளோவெனில்
இருண்ட கண்ணாடி சன்னல்களூடன்
அனைவரையும் குருடாக்க்கும்-
வெளியிலும் உள்ளிலும் சேர்த்து..

இன்று.
எதிர் இருக்கையில் புது மணமக்கள்
அருகினில் கால் வீங்கிய கிழவி,
பின்புற இருக்கைகளில் குழந்தைகளின்
கூச்சல்...
எதுவும் நேற்றிருந்த வண்டியில் இருந்ததில்லை.
நாளை , அருகில் பைத்தியக்காரனாயிருக்கலாம்.

அலறி விரைந்த வண்டி புள்ளியாய்ப் போனபின்
தண்டவாளங்களின் சேர்க்கை விலகி
அடுத்த வண்டி வரும்வரை
சல்லிக்கற்களில்
இவ்வதிர்வுகள்....

தேடிக்கொண்டிருக்கிறேன்
நீண்ட பனைமரங்களினுடே
தெரியும் அந்த அமைதியான குடிசைபோலவொன்று
அதிர்வுகளற்றோ .
அன்றி சன்னமாய் அதிர்ந்தபடியோ..


அன்புடன்
ஸ்ரீமங்கை

Sunday, December 19, 2004

TheruvilakkukaL

தெருவிளக்குகள்
-----------------------


முன்பெல்லாம் குழல்விளக்கு
இத்தெருவில்.
இறந்த பூச்சிகள் கரியாக
அடைத்துக்கிடக்க
பாதிக் குழல் காட்டியபடி
மழை முடிந்ததென
யாரும் கேட்காமலே
மங்கிய ஒளியில் மெளனமாய்
அறிவித்துக்கிடக்கும்.

மின்சாரம் பாய்ந்தும்
மூன்று மணிநேரமாய்
மினுமினுக்கி, இறுதியில்
யாரும் அறியா நடுநிசியில்
கசிந்த இருளில் ஒளிகரைத்து
இறந்துபோகும்.

உண்ணியரித்த
முதுகு தேய்த்து,
முகர்ந்த நாய்கள்
கால்தூக்கி உபாதைஇறக்கிப்
போன நசுங்கிய கம்பங்கள்
இறந்த விளக்கின் சுமையோடு
கழுத்து வளைந்து மெளனமாய்
தலைகுனிந்து நிற்கும் ..
எதிர்வீட்டுக் கிழவர் போலே.

இப்போதெல்லாம்
இங்கே,
சோடியம் வேப்பர் விளக்குகள்
ஒரே அலைநீள மஞ்சள் ஒளிபரப்பி
வெறியேறி ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது
கண்கள் கூசிமளவிற்கு..
விறைத்த கம்பங்களோவெனில்
மதர்ப்பாய் நிமிர்கின்றன-
ஓய்யாரமாய் விளக்குகளை
கோணங்களில் தாங்கியவாறு.

அன்புடன்
ஸ்ரீமங்கை