இரயில் அதிர்வுகள்
--------------------------
போய்க்கொண்டேயிருக்கிறது
இத்தொடர் வண்டி
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
பழுப்பு நிற அழுக்கு
இணைவுப்பெட்டிகளினூடே
புதிதாய் நீலநிறப்பெட்டி
எப்போதும் அதே வரிசையில்
இல்லாது நகரும்.
மெல்லியதாய் முனகியபடி
முட மறுக்கும் , திறந்த கண்ணாடி சன்னல்
திறக்க மறுக்கும் மூடிய இரும்பு சன்னல்
பகுதி திறந்திருக்கும் சன்னல்களோவெனில்
இன்னும் அபத்தம்.
காற்று சமனப்படுத்திய பெட்டிகளோவெனில்
இருண்ட கண்ணாடி சன்னல்களூடன்
அனைவரையும் குருடாக்க்கும்-
வெளியிலும் உள்ளிலும் சேர்த்து..
இன்று.
எதிர் இருக்கையில் புது மணமக்கள்
அருகினில் கால் வீங்கிய கிழவி,
பின்புற இருக்கைகளில் குழந்தைகளின்
கூச்சல்...
எதுவும் நேற்றிருந்த வண்டியில் இருந்ததில்லை.
நாளை , அருகில் பைத்தியக்காரனாயிருக்கலாம்.
அலறி விரைந்த வண்டி புள்ளியாய்ப் போனபின்
தண்டவாளங்களின் சேர்க்கை விலகி
அடுத்த வண்டி வரும்வரை
சல்லிக்கற்களில்
இவ்வதிர்வுகள்....
தேடிக்கொண்டிருக்கிறேன்
நீண்ட பனைமரங்களினுடே
தெரியும் அந்த அமைதியான குடிசைபோலவொன்று
அதிர்வுகளற்றோ .
அன்றி சன்னமாய் அதிர்ந்தபடியோ..
அன்புடன்
ஸ்ரீமங்கை
No comments:
Post a Comment